top of page

தளத்தை பற்றி 

கடந்த அறுபது ஆண்டுகளில் பயணம் செய்பவர்கள் அதிகமாகி உள்ளனர், பயணத்திற்கான வழிகளும் இலகுவாகி உள்ளது, ஆனால் பயணம் சார்ந்து பதிவு செய்யப்படும் எழுத்துக்கள் குறைந்து வருகின்றது. இருபது ஆண்டுகளுக்கு முன் பயணம் செய்தவர்கள் மொழியின் மூலம் மட்டுமே அவர்கள் கண்ட நிலப்பரப்பையும், மனிதர்களையும், அனுபவங்களையும் நினைவில் சேகரித்துக் கொண்டனர். இன்று கைலாய யாத்திரையே முப்பது வினாடி காணொளியில் சுருங்கி விழுகின்றது.

பயண வழிகளிலும், பயணத்தை பதிவு செய்யும் முறைகளிலும் கடந்த இருபது ஆண்டுகளில் பல மாற்றம் வந்துள்ள போதிலும்,  பயணத்தை பதிவு செய்வதில் மொழியின் பங்கு தவிர்க்கமுடியாத ஒன்று என நாங்கள் எண்ணுகின்றோம். 

இந்த தளத்தில் இதுவரை நாங்கள் செய்த பயணத்தையும், அனுபவத்தையும் பதிவுசெய்வது முதல் இலக்கு, எங்களை போல் பலர் பயணம் செய்துள்ளனர் அவர்களையும் பயணம் சார்ந்து எழுதவைப்பது மற்றுமோர் இலக்கு. இந்த தளத்தின் தொலை நோக்கு இலக்கு ஒன்று உண்டு, அது உலகில் உள்ள அத்தனை நிலப்பரப்பை பற்றியும் தமிழில் ஒரு கட்டுரையாவது அங்கே பயணித்தவர்கள் இந்த தளத்தின் வழியே எழுதவேண்டும் என்பது . இந்த தளத்தின் அடிப்படை செயல்பாடுகளாக சிலவற்றை திட்டமிட்டுள்ளோம் அவை 


1)  சிறந்த பயண அனுபவங்களை தமிழில் ஆவண படுத்துதல்.


2)  பிற தளங்களில் வெளியாகி கவனம் பெறாமல் போன பயண பதிவுகளை மறுபிரசுரம் செய்தல்.


3)  அச்சில் இல்லாத பழைய பயண நூல்களை தொகுத்து இந்த தளத்தில் பகிர்ந்து வாசகர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லுதல். 


3) ஆங்கிலத்தில் வந்த சுவாரசியமான பயண நூல்களை, கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுதல். 


4) அணைத்து தரப்பு பயணிகளும் பயன்பெரும் வகையில் ஊர், இடம் சார்ந்து வழிகாட்டி நூல்களை தயாரித்து இலவசமாக அளித்தல். 


5) ஊடக வெளிச்சம் பெறாத பயணிகளை பற்றியும் அவர்களின் கதைகளையும் பதிவு செய்தல்.


6) பயண இலக்கியத்திற்கான சரியான அமைப்பையும், நெறிமுறைகளையும் வகுத்தல். 


7) ஆங்கிலத்தில் இருப்பது போன்று சர்வதேச தரத்தில் பயண எழுத்தாளர்களை உருவாக்குதல். 

அமைந்தவர்கள் அலையத்துவங்கவும், அலைந்தவர்கள் அமைந்துகொள்ளவும் இந்த வழி என்றும் திறந்து இருக்கும்.

எழுத்தாளர் ஜெயமோகன் பரிந்துரைத்த பயண விதிகள் 

எந்தப்பயணத்திலும் திட்டமிட்டு, பயின்று, ‘கவனமாக’ இருக்கவேண்டும். அதற்குரிய சில வழிகள் உள்ளன

அ. செல்லுமிடத்தைப் பற்றி தெரிந்துகொள்ளுதல். இன்று எந்த இடத்தைப்பற்றியும் இணையம் வழியாகத் தெரிந்துகொள்ளலாம். ஓர் இடத்தின் வரலாறு, பண்பாடு, அதன் கலைப்பெறுமதி, நடைமுறை முக்கியத்துவம் ஆகியவற்றைத் தெரிந்துகொண்டாலே நாம் அதன்மேல் நம் கவனத்தை நிலைநிறுத்த ஆரம்பிக்கிறோம். கொஞ்சம் தெரிந்துகொண்டதுமே அந்த இடம் மாறிவிட்டிருப்பதைக் காணமுடியும்.

ஆ. அந்த இடத்தில் போதுமான அளவு நேரம் செலவழித்தல். பார்த்தல் வேறு, உள்வாங்குதல் வேறு. வேகமாகப் பார்க்கும் இடங்கள் நினைவில் நிற்பதில்லை. அங்கே திட்டமிட்டு குறிப்பிட்ட நேரம் செலவழிக்கவேண்டும். அந்த இடத்தின் முக்கியமான இடங்களை கண் ஊன்றி கருத்தூன்றி பார்க்கவேண்டும். புகைப்படம் எடுத்துக்கொண்டு அகன்றுவிடக்கூடாது.

இ. விழிகளால் ஊழ்கம் செய்தல். நாங்கள் செய்யும் ஒரு பயிற்சி உண்டு. ஓர் இடத்தில் அமர்ந்து விழிகளை 180 பாகைக்கு மிகமிக மெல்ல ஓட்டி ஒவ்வொரு பொருளாக கூர்ந்து நோக்கி 20 நிமிடம் அமர்ந்திருப்பது. அது ஊழ்கம்தான். அப்போது எண்ணம் எழுந்து நோக்கும் பொருட்களிலிருந்து அப்பால் கொண்டுசெல்லும். அவற்றை உந்தித்தவிர்க்கவேண்டும். மீண்டும் மீண்டும் காட்சியிலேயே கருத்தை நிறுத்தவேண்டும். இப்படி ஊழ்கத்திலிருந்த எல்லா இடங்களும் மிக ஆழமாக உள்ளே சென்றுள்ளன.

ஈ. பயணத்தின் இரவுகள் முக்கியமானவை. செல்லுமிடங்களை எண்ணியபடி படுங்கள். இரவில் அரட்டை, குடி என பொழுதுசெலவிட்டால் நோக்கியவை அகன்றுவிடும். துயில்வதற்கு முன் இறுதியாக கண்களுக்குள்ளும் சிந்தனையிலும் எஞ்சவேண்டியவை நாம் அன்று கண்ட காட்சிகள்.

- ஜெ

தளத்தில் பங்களிப்பவர்கள் 

கௌசிக்

கௌசிக்

ஒளிப்பட கவிஞர், பயணி

சட்டகங்களுக்குள் நிலப்பரப்பையும், வரலாற்றையும் அடைத்து வைத்து, ஒலி விழியால் அழகுபடுத்தும் ஓர் வழிப்போக்கன்.

புகைப்பட கலையையும் பயணத்தையும் இணைக்கும் விதம் "சுசம்யதி" என்ற நிகழ்வை நடத்திவருகிறார்.

சுபஸ்ரீ

சுபஸ்ரீ

தீராபயணி, யோகினி, எழுத்தாளர்

மன ஓடையில் வழிந்தோடும் எண்ணங்களை கலை கடலில் கரைத்துவிடும் ஆற்றல் பெற்ற கவி. உலகெங்கும் தான் பயணித்த தூரத்தை எழுத்துக்களால் அளந்துவிட தவிக்கும் தாரகை.

அனுபவக்கட்டுரை, பயணக்கட்டுரை, விமர்சனக்கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி வருகிறார். ,

நிக்கிதா

நிக்கிதா

சாகச பயணி, தளத்தின் இணை-நிர்வாகி

மைக்ரோ லைட் விமானி, நூறு நாட்களுக்கும் மேல் இராணுவ பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்ற அனுபவம் உண்டு. இந்தியாவில் பல மாநிலங்களில் மலையேற்ற சாகசங்கள் செய்ததுண்டு. பாம்புகளை கையாளவும், மீட்கவும் தொழில் முறையாக பயற்சி பெற்றவள்.

கவிதா

கவிதா

யோகா பயிற்றுனர், தொகுப்பாளர்

இந்த தளத்தில் பிரசுரிக்கப்படும் எல்லா கட்டுரைகளையும், பதிவுகளையும் பிழைதிருத்தும் பொறுப்பில் உள்ளார்.

தமிழில் வெளியாகும் கவிதை, கதை ஆகியவற்றை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறார். இலக்கியம் தொடர்பான பல நிகழ்வுகளின் தொகுப்பாளராக செயல்பட்டு வருகிறார்.

சமஸ்

சமஸ்

அருஞ்சொல்’ இணைய இதழின் ஆசிரியர்.

இந்திய முழுவதும் சுற்றி திரிந்தவர், சாமான்ய மனிதரின் குரலாக ஒலிப்பவர்.

சாப்பாட்டு புராணம் , இந்திய வண்ணங்கள் , லண்டன் ஆகியவை இவரின் முக்கியமான பயணம் சார்ந்த புத்தகங்கள்.

சாளை பஷீர்

சாளை பஷீர்

எழுத்தாளர், பயணி

என் வானம் என் சிறகு, தோந்நிய யாத்ரா ஆகிய பயணநூல்களின் ஆசிரியர், கசபத் என்னும் நாவலை எழுதியுள்ளார்.


தன் வலைப்பூவில் பயணம் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார்.

இளம்பரிதி

இளம்பரிதி

தேசாந்திரி , தளத்தின் நிர்வாகி

கோடுகள் அற்ற வரைபடத்தை சிந்தனையில் வைத்துக்கொண்டு, திசைகளின் நடுவே நின்று, மனம் போன போக்கில் வழிகளை கண்டடையும் வித்தையை கற்றுவருகிறேன், என்னுடன் பயணியுங்கள் உங்களுக்கும் வரைபடத்திலிருந்து கோடுகளை அழிக்க கற்றுக்கொடுக்கிறேன்.

bottom of page