top of page

என் வானம் என் சிறகு - 2

(இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் நான் பயணம் செய்த கதை, இந்த கட்டுரைகளை பரிசல் பதிப்பகம் 2018யில் புத்தகமாக வெளியிட்டுள்ளது)


(பிரம்மபுத்ரா நதியின் மேல் அசாமிய பெண்ணொருத்தி)


கவுன் போட்ட இந்திரா பிரியதர்ஷினி காந்தியின் தலைமாட்டில் அமர்ந்திருக்கிறார். ஜனநாயகக்கனியின் அருகில் சர்வாதிகார தளிர். உறையும் காலத்தின் மெல்லிய சட்டகங்களுக்குள்ளிருந்து மெல்ல கசிந்து நிகழ்காலத்திற்குள்ளும் இறங்கிக் கொண்டிருக்கும் இரு தீரா முரண்கள்.

குவாஹத்தியை பார்க்க ஒரே ஒரு நாள்தான் ஒதுக்கினோம். முதலில் அஸ்ஸாம் அரசு அருங்காட்சியகத்திற்கு சென்றோம்.அருங்காட்சியக வளாகத்தினுள் நாங்கள் மூவரும் சேர்ந்து நிற்கிறார் போல ஒரு ஒளிப்படம் எடுப்பதற்காக ஆளைத் தேடினோம். தலைவாயிலைக் கடந்து ஒற்றைக்கோடு போடுவது போல நங்கை ஒருத்தி சீராக நடைபயின்று வந்தார்.


நாங்கள் கேமிராவைக்காட்டி சொல்வதற்குள் அவர் தன்னைத்தான் நாங்கள் ஒளிப்படம் எடுக்கப்போகின்றோம் என நினைத்துக்கொண்டார் போலும். அதற்கேற்ப தோரணை அவரிடம் வெளிப்பட்டது. விளக்கி சொன்னவுடன் குறு நகையுடன் சம்மதித்தார்.


அருங்காட்சியகத்திற்குள்ளே அஸ்ஸாமின் நாகாவ் பகுதி பழங்குடி மாணவி நடந்து வந்தாள். வானத்திலிருந்து இறங்கி பாந்தமாக தரையில் நடக்கும் பறவை நடை கௌதாரியை நினைவுபடுத்தும் ஆடை, ஆளை நிற்கச்சொல்லி படமெடுத்தேன். நான் நன்றி சொல்வதற்குள் எனக்கு நன்றி சொல்லிவிட்டு இளம் புன்னகையுடன் அவள் மீண்டும் மெல்ல நடந்து காற்றில் ஏகினாள்.


பொதுவாகவே வடகிழக்கின் பொது வெளியில் பெண் ஆண் எதிர்கொள்ளல் என்பது மிக இயல்பாகவும் அச்சுறுத்தலு மின்றியும்தான் நடைபெறுகின்றது. பதட்ட அதிர்வுகளும் அலட்டல்களுமில்லை. பெரும்பான்மை இந்தியாவில் இவை அரிதான நிகழ்வுகளே.


அரசு துறைகளுக்குரிய அலட்சியமும் பற்றாக்குறையும் அருங்காட்சியகத்தில் எதிரொலித்தாலும் அஸ்ஸாம், & வடகிழக்கு பற்றிய சிறு திறப்பை உண்டாக்கும் வகையில் அமைத்திருந்தனர். ஏராளமான அரங்குகள். தூய்மையாகவும் அகலமானவையாகவும் இருந்தன.


காந்தியடிகளின் அரிய ஒளிப்படங்களையும் வைத்திருக் கிறார்கள். கவுன் போட்ட இந்திரா பிரியதர்ஷினி காந்தியின் தலைமாட்டில் அமர்ந்திருக்கிறார். ஜனநாயகக்கனியின் அருகில் சர்வாதிகார தளிர். உறையும் காலத்தின் மெல்லிய சட்டகங்களுக்குள்ளிருந்து மெல்ல கசிந்து நிகழ்காலத்திற்குள்ளும் இறங்கிக் கொண்டிருக்கும் இரு தீரா முரண்கள்.


ரப்பரால் ஊற்றி இறுக்கப்பட்டது போன்ற முக அமைப்பு, சதைப்பாறை படித்தட்டு போலவுள்ள கன்ன கதுப்பு, செந்நிறம், வலுவான உடற்கட்டு, வண்ண வண்ண ஆடைகளுடன் ஒரு பழங்குடி குடும்பம் படிகளில் இறங்கிக்கொண்டிருந்தனர். அதில் ஒரு மூதாட்டி தன் வயதை மட்டுமே தன்னிலிருந்து கடந்து போக விட்டிருக்கின்றார். அவரின் உடலின் மிடுக்கையும் கட்டுறுதியையும் எதனைக் கொண்டு பிடித்து வைத்திருக்கின்றார் எனத் தெரியவில்லை.

காமரூபம் என முன்னர் என்றழைக்கப்பட்ட மாநிலத்தின் இன்றைய பெயர் அஸ்ஸாம். அதனை ஆண்ட அஹோம் அரச மரபினரின் பெயரிலிருந்து திரிந்து உருவானது. அரசாட்சி, இனக்குழு ஆட்சிகளின் கீழ் மாறி மாறி ஆளப்பட்ட அஸ்ஸாம், கி.பி. 1821இல் பர்மிய ஆட்சியாளரின் கையில் வருகின்றது. பின்னர் வெள்ளையர் ஆட்சியின் வழியாக விடுதலை இந்தியாவின் உறுப்பாக மாறியது. இந்தோ ஆரியன், ஆஸ்ட்ரோ ஆசியாடிக், திபெத்தோ பாமியன் என மூன்று இனங்களின் சங்கமமாக அஸ்லாம் வினங்குகின்றது.


1837ஆம் ஆண்டிலிருந்து தேயிலை பயிரிடுதல் இங்கு தொடங்கியிருக்கின்றது. தேயிலைத்தோட்டங்களில் பணி புரிவதற்காக நாட்டின் உள்பகுதிகளிலிருந்து ஏராளமான அடிமைத் தொழிலாளர்களை கொண்டு வந்து மணல் குவிப்பது போல் குவித்தது வெள்ளையரசு. கிழக்கு பாக்கிஸ்தானாக இருந்து இந்தியாவின் தலையீட்டின் பேரில் தனி நாடாக்கப்பட்டது பங்ளாதேஷ்.இந்திராவின் இந்தத் தவறான முடிவினால் இந்தியப் பிரிவினையின் கசப்பான அடிப்படைகள் என்றென்றைக்கும் நீறிக் கொண்டிருக்கும் நெருப்பு வித்துக்களாக மாறி வடகிழக்கு முழுக்க விழுந்திருக்கின்றது.


புதிய தேசம், அரசியல் குழப்பங்கள் ஏற்கனவே நீடிக்கும் வறுமையும் நெருக்கடியும் என எல்லாமாக ஒன்று சேர்ந்து மாபெரும் அகதித்திரள் பங்களாதேஷின் எல்லாப் பக்கங்களிலிருந்தும் வெளியில் உதிர்ந்தது.


பசித்தவனுக்கு ஏது எல்லைக்கோடு? சோறும் நீரும் நிம்மதியும் எங்கேயாவது கிடைத்திடாதா? என்ற தவிப்பில் பெங்காலிலிருந்து இந்தியா வந்த அகதிகள் ஏராளம். பிரிவினை, வெறுப்பு, அதிகார, மேலாதிக்க காய் நகர்த்தல்கள் என்ற ரீதியில் அரசுகள் நடத்தும் அரசியல் கொடூரங்களின் தீய கனியை புசிப்பது வறுமையும் பசியும் மட்டுமே விதிக்கப்பட்ட சராசரி மக்களே.


பெங்காலி முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல் 1983ஆம் ஆண்டு மோரிகாவ் மாவட்டம் நெல்லி கிராமத்தில் நடைபெற்றது. இந்தியப்பிரிவினையின் நச்சு தொடர் விளைவு.


தீவிரவாத அஸ்ஸாமின் மாணவர் அமைப்பினரை உள்ளடக்கிய அஸ்ஸாம் கண பரிஷத்துக்கும் நடுவணரசுக்குமிடையே அஸ்ஸாம் ஒப்பந்தம் 1985 ஆம் ஆண்டு ஏற்பட்டது, அதன்படி நெல்லி இன அழித்தொழிப்பிற்கு காரணமான அனைத்து குற்றவாளிகளின் மீதான வழக்குகளும் கைவிடப்பட்டன. அஸ்ஸாம் கண பரிஷத் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றியது. அதிகாரத்திற்கு இட்டுச் செல்லும் படிக்கட்டுகளில் மனித கவுச்சி. அஸாமில் குடியேறும் வெளி மாநிலத்தவர்களால் அஸாமியர்களின் பொருளாதார நலன்கள் பறிபோகின்றன என்ற பொதுவான குற்றச்சாட்டுடனேயேதான் இந்த இயக்கம் தொடங்கியது.


இந்த இயக்கத்தின் போக்கை திசைமாற்ற ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்தது ஆர்.எஸ்.எஸின் இந்த அழிவுமிக்க செயல்திட்டத்தை ஹிரண்யகுமார் பட்டாச்சார்ய, பிரேம்காந்த மஹந்தா என்ற இரு காவல்துறை அலுவலர்கள் முன்னெடுத்தனர். முதன் முதலில் அவர்கள் செய்த வேலை வாக்காளர் பட்டியலில் கைவைத்ததுதான். அன்று அஸாமில் நடந்த மங்கள்தோய் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன்பாக அத்தொகுதியின் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டது. இந்த இரண்டு காவல் அலுவலர்களும் தங்களது பணி வரம்பை கடந்து வாக்காளர் பட்டியலில் கைவைக்கும் வேலையை தொடங்கினர்.


முதல் கட்டமாக வாக்காளர் பட்டியல் திருத்த அலுவலருடன் காவல்படையை அனுப்பி வைத்தனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம், பங்ளாதேஷி ஊடுறுவல்காரர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து விடக்கூடாது என்பதுதான். முதலில் அவர்கள் ஊடுறுவல்காரர்கள் எனச் சுட்டிக்காட்டியது, பங்ளாதேஷி ஹிந்து, முஸ்லிம்களைத்தான்.


அதன் பின்னர் அஸாமின் தலைமைச் செயலர் பரமசிவத்தை சந்தித்து வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு கூடுதல் கால அவகாசம் கோரினர். அதன் பேரில் ஒரு வாரகாலம் நீடிக்கப்பட்டது. இந்த ஒரு வாரகாலத்தில் ஊடுறுவல்காரர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையிலிருந்து தடுப்பதற்கு மாற்றாக. பங்ளாதேஷிகள் எனக்கூறி முஸ்லிம்களின் பெயரை மட்டும் நீக்கினர். ஆனாலும் இது சட்டவழி நடவடிக்கைகளினால் நிரம்பிய வழி என்பதால் தங்களது நோக்கம் நிறைவேறுவது தாமதமாகும் என கண்டனர், துரித வழியை தேடினர்.


இதை மக்கள் திரள் நடவடிக்கையாக மாற்றுவது ஒன்றுதான் அதற்கான வழி என்பதை கண்டறிந்தனர். மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்களின் தலைக்குள் தங்களின் திட்டங்களை வெற்றிகரமாக திணித்துவிடுவது என்ற முடிவிற்கு வந்தனர். அனைத்து அஸ்ஸாம் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ஃபிரபுல்ல குமார் மஹந்தா, அதன் பொதுச் செயலர் பிருஹு புக்கான் ஆகியோரை சந்தித்து அஸ்ஸாம் மாநிலத்திற்குள் பங்ளாதேஷி முஸ்லிம்களின் ஊடுறுவல்தான் தலையாய பிரச்சினை என்பதாக மூளைச்சலவை செய்தனர்.


ஏற்கனவே அதற்கேற்றார் போல உள்ள ஆவணங்களை அணியமா கையில் வைத்திருந்த இந்த இரு காவல்துறை அலுவவர்களும் அவற்றை இந்த தலைவர்களிடம் வழங்கினர். பங்ளாதேஷிகளை அடையாளங்கண்டு அவர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கும் பணிக்கு முன்னுரிமை கொடுப்பது என அந்த இரண்டு மாணவர் தலைவர்களும் ஒத்துக் கொண்டனர். அதற்கேற்ப தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது.

  • பங்ளாதேஷிகளை அடையாளங்காணுங்கள்.

  • வாக்காளர் பட்டியலிலிருந்து அவர்களை நீக்குங்கள்.

  • இந்தியாவை விட்டு அவர்களை வெளியேற்றுங்கள்

என்ற மூன்றம்ச கோரிக்கை மண்டைக்குள் நுழைக்கப்பட்டு அஸாமிகளின் நீதமான பொருளாதார போராட்டம் ஃபாஸிஸ்டுகளால் திசை மாற்றப்பட்டது. வாக்காளர் பட்டியலிருந்து உள்ளூர் முஸ்லிம்களின் பெயரை நீக்குவது தொடர்ந்தது. சூடு பிறந்து கனிந்து புகையத் தொடங்கி பெரு நெருப்பாக படர்ந்தது. அனைத்து அஸ்ஸாம் மாணவர் ஒன்றியம் (AASU) என்ற மாணவர் அமைப்பின் தலைமையின் கீழ் அணிதிரண்ட பழங்குடியினரால் 3,500க்கும் மேற்பட்ட குடிமக்கள் இன அழித்தொழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டனர்.

மதிய உணவிற்காக உணவக அலைச்சல். கடைசியில் ஒரு மார்வாடி கடைக்கு வந்து சேர்ந்தோம். தில்லி ஜய்ப்பூரை விடவும் இந்த உணவகத்தில் விலை மிகவும் கூடுதல். அதே போல இரவுணவிற்காக ஒரு கேரளீயரின் கடைக்கும் சென்றோம். தென்னிந்திய உணவு வகைகள் அனைத்துமே கிடைக்கின்றன. பொதுவாகவே இங்கு நல்ல உணவுகளுக்கு மிகக் கூடுதலாகவே விலை கொடுக்க வேண்டியுள்ளது.

பிரம்மபுத்திரா படகு பயணத்திற்காக சென்றோம். குவாஹத்தியை தெற்கு வடக்காக பிளந்து போட்டிருக்கும் மாபெரும் நீர் பரப்பு, வானத்தையும் நிலத்தையும் நீராக உருக்கி பெருந்தட்டு ஒன்றில் பரத்தி வைக்கப்பட்டிருந்தது. ஐந்து ரூபாய் கட்டணத்தில் இக்கரைக்கும் அக்கரைக்குமான படகு பயணம், கட்டணப்பலகையில் மனிதர், பன்றி, மிதிவண்டி, மோட்டர் சைக்கிள், ஆடு, சரக்குகளுக்கு என தனித்தனியாக கட்டணத்தை எழுதி வைத்திருந்தார்கள். மனிதருக்கான கட்டணம் ஐந்து ரூபாய் தான்.


மேல்தட்டில் இரு சக்கர ஊர்திகள் சரக்குகள், கீழ்தட்டில் மனிதர்கள் என சுமந்து கொண்டு புறப்பட்டது படகு. மெல்லிய பழுப்பு கலந்த நீர் குமிழ் விட்டு விலகியது. தன்னைத்தானே முழு மூச்சுடன் இழுத்துக் கொண்டு ஓடும் நதியின் திறப்படலம். அதன் ஆழத்தையும் வேகத்தையும் கள்ள சிரிப்புடன் தனக்குள் ஒளித்தே வைத்திருக்கின்றது, ஒரு முறை பீஹாரி தொழிலாளர்களை ஏற்றிசென்ற படகு கவிழ்ந்திருக்கின்றது. ஆட்களும் இல்லை படகும் இல்லையாம்.


அஸ்ஸாமின் வாழ்வும் இறப்பும் அழகும் அலங்கோலமும் பிரம்மபுத்திரா நதிதான். மற்ற மாதங்களில் குமரி நடை பயில்பவளுக்கு பருவ காலங்களில் ஊழித்தாண்டவம்தான்.


இருள் கவிழும் முன்னர் மா காமாக்யா கோவிலைப் பார்த்து விடலாம் என கிளம்பினோம். 51 சக்தி பீடங்களில் அன்னை காமாக்யா கோயிலும் ஒன்று. 8 ஆம் நூற்றாண்டைசார்ந்தது. கீழ் அஸ்ஸாமின் ஷிகாரா பாணி கட்டிடக்கலை, கல்லால் ஆன தேன் கூடு. நமதூர் கோயில்தலங்களில் ஆக்கிரமித்திருக்கும் கடைக் காரர்களின் ஒழுங்கற்றத்தனத்தை இங்கு பார்க்க முடியாது. கோயிலுக்கு செல்லும் பாதை தொடங்கி உள் வளாகம் வரை எவ்வித வெளிக்கட்டுப்பாடுகளும் இல்லாமல் தூய்மையாகவும் அழகாகவும் பராமரிக்கப்படுகின்றது.


தாந்த்ரீக மரபையொட்டி இங்கு கால் நடைகளை பலியிடுகின்றனர். நேர்த்திக்கடனுக்கான குட்டை ஆடுகள் கோயிலுக்குள் சுருட்டை முடிகளுடன் ஓடியாடிக்கொண்டிருந்தன பலி பீடத்தை போய் பார்த்தோம். ஈரக்காற்றில் கலந்து வீசும் குருதி வாடை. காலை வேளைகளில்தான் பலி நடக்கும் என்றார்கள்.


குவாஹத்தி என்ற தலைவாயிலில் இருந்து வடகிழக்கின் ஆழத்திற்குள் எப்படி குதிப்பது ? வடகிழக்கைப் பொறுத்தவரை அரசு போக்கு வரத்து பேருந்துகள் என்பது வெறும் பெயரள வில்தான். ரயில் பாதைகளும் வடகிழக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இப்போதுதான் துளிர்க்கத் தொடங்கியுள்ளன.


படா காடி, சோட்டா காடி எனப்படும் தனியார் பேருந்துகள், சுமோக்கள், விங்கர்கள் என்பனதான் போக்குவரத்தின் நாடி நரம்புகளாக இங்கு இருக்கின்றன. இரண்டு மூன்று தனியார் பயண ஏற்பாட் டாளர்கள்தான் வடகிழக்கின் போக்குவரத்தை தொடர்ச்சியாக இயக்கி வருகின்றனர். சுற்றுலா பயண ஏற்பாட்டு நிறுவனம் ஒன்றை அணுகினோம். அவர்கள் சொன்ன பயண நேரங்களும் தொலைவும் எங்களை புதிய குழப்பத்திற்குள் ஆழ்த்தின. அவர்களின் வண்டி நேர அட்டவணைகளுக்கேற்பவே தகவல்களை வளைக்கின்றனர் என்பதை பின்னர் புரிந்து கொண்டோம்.


கேரள உணவகத்தில் தமிழக இளைஞர்கள் இருவரை சந்தித்தோம். அவர்கள் தொலைத் தொடர்பு பணித்திட்டம் தொடர்பாக குவாஹத்தியில் தங்கியிருப்பவர்கள். அவர்கள் தந்த திட்டத்தின்படி சிறிய வண்டியில் ஷில்லாங்கிற்கு சென்ற பின் அங்கிருந்து ஒவ்வொரு பகுதியாக பயணத்தை தொடருவது என தீர்மானித்தோம்.


காலையில் குளித்து ஆயத்தமாகி காரில் கிளம்பினோம். குவாஹத்தியிலிருந்து ஷில்லாங் செல்லும் பாதையில் வண்டி நுழைந்த போது ஓட்டுனர் சொன்னார், ' இந்த பாதையின் வலது பக்கம் மேகாலயா இடது பக்கம் அஸ்ஸாம் என சொன்னார். அப்படித்தான் பெயர்ப்பலகைகளிலும் எழுதியிருந்தது. சாலை தடுப்பை எடுத்துவிட்டால் என்ன ஆகுமோ தெரிய வில்லை....!?.


மலை ஏற்றம் எனத் தெரியாத அளவிற்கான சாலை. இன்பமான பயணம். முதுகுக்குப்பின்னே இந்தியா விலகி செல்ல செல்ல குளிர்ந்த காற்றின் இளம் வருகையைப்போல வடகிழக்கானது மெல்ல தன் மூடலை விலக்கிக் கொள்ளத் தொடங்கியது. மார்பின் குறுக்காக தோளில் முடிந்திருக்கும் வண்ண துவாலைகளுடன் மேகாலாயப் பெண்கள் வண்ணங்களை சுமக்கும் வண்ணங்கள்.


ஷில்லாங்கில் நாங்கள் போய்ச்சேரும்போது மழை பூச்சொரியலாக பொழிந்து கொண்டிருந்தது. விடுதியில் சிறிது ஓய்வெடுத்து விட்டு மிஜோரம் ஹவுஸ் சென்றோம். மௌனம் நிரம்பி வழியும் ஒரு பூந்திடலுக்குள் நின்றிருந்தது மிஜோரம் ஹவுஸ், எந்த பணியும் இல்லாத ஒரு ஓய்வுச் சூழலில் அங்குள்ள அலுவலர்கள் இருந்தனர். நடுத்தொண்டை குரலில் சன்னமாக தங்களுக்குள் பேசிக்கொண்டனர். இடம் தூய்மையாக இருந்தது. முதியவர் ஒருவர் தனது கைபேசியில் மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்தார்.


மிஜோக்கள் அல்லாத யாராக இருந்தாலும் மிஜோரத்திற்குள் நுழைய இன்னர் லைன் பர்மிட் எனப்படும் உள் நுழைவு இசைவுச்சீட்டைப்பெற வேண்டும். பதினைந்து நாட்களுக்கான இசைவு என இணைய தளத்தில் போட்டிருந்தாலும் ஏழு நாட்களுக்கான இசைவு மட்டுமே கிடைத்தது. அன்று தலைமறைவு இயக்கமாக இருந்த மிஜோ தேசிய முன்னணிக்கும் இந்திய அரசுக்கும் இடையே முப்பத்தோரு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்படி இந்த நுழைவுச்சீட்டு முறை நீடிக்கின்றது.


வெள்ளையர்கள் தங்கள் வணிக நலன்களுக்காக போட்ட சட்டமானது இந்திய விடுதலைக்குப்பிறகு வடகிழக்கின் தனித்தன்மையை பாதுகாக்க நடைமுறைப்படுத்தப்படுகின்றது. தற்சமயம் மிஜோரமிலும் அருணாச்சல் பிரதேஷிலும்தான் இந்த நடைமுறை உள்ளது. அரை மணி நேரத்திற்குள் அனுமதி சீட்டு வேலையை முடித்துவிட்டு Don Bosco Centre for Indigenous Cultures (DBCIC) என்ற கிறிஸ்தவ நிறுவனத்தின் வடகிழக்கு தொடர்பான அருங்காட்சியகத்திற்கு சென்றோம்.


கேரளத்தை நினைவிற்கு கொண்டு வரும் மேடு பள்ளமான சாலைகள். அடுக்குத்தட்டு வீடுகள். வீட்டின் கொடிகளில் காயப் போட்டிருந்த துணிகளிலிருந்து கிளம்பிய நீராவிப் படலமானது சிறு வெண் துவாலை போல மடங்கி உயர்ந்து திவலைகளாக கரைந்து கொண்டிருந்தது. இந்திய நகரங்களின் தலையாய சாலை சந்திப்புகளில் காணப்படும் பரபரப்பு ஒழுங்கின்மை கூச்சல் புழுதி தாறுமாறான போக்குவரத்து அலங்கோலங்கலை ஷில்லாங்கில் அறவே பார்க்க முடிவதில்லை.

பொது வெளிகளில் மக்களின் நடமாட்டமானது தோல் பாவைக்கூத்தின் வண்ண சலனம் போல இருந்தது. மூடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகத்தான் அருங்காட்சியகம் போக முடிந்தது. துரித கதியில் பார்க்கத் தொடங்கினோம்.


ஏழு தளங்களைக் கொண்டது. 1985 இல் பாதிரியார் ஒருவரின் கனவுக்குள் இருந்து முளைத்த இந்த அருங்காட்சியகத்தை 2010 ஆம் ஆண்டு சோனியா காந்தி திறந்து வைத்திருக்கிறார். பன்னாட்டு தரத்தில் பல்ஊடக வசதியுடன் கூடிய அருமையான காட்சியகம்.

நூஹ் நபியின் ஊழிப் பிரளய கப்பலிலிருந்த எல்லா உயிரிகளின் வகை மாதிரிகளிலிருந்து உலகத்திற்குள் உயிர் மீட்கப்பட்டது போல மொத்த வடகிழக்கும் இல்லாமல் போனாலும் கூட இங்கிருக்கும் காட்சிப்பொருட்களின் வழியாக திரும்பவும் கட்டி எழுப்பலாம் போலிருந்தது.

கடின உழைப்பும் நேர்த்தியும் நுட்பமும் வடிவழகும் ஒவ்வொரு தளத்திலும் மின்னியது. தலைக்கு நூறு ரூபாய்கள் கட்டணம் வாங்குகின்றார்கள். அனைத்து தளத்திலும் நன்கு பராமரிக்கப்படும் குடிநீர் வசதிகள், கழிவறைகள். எல்லா அரங்குகளும் ஒலி ஒளி அமைப்பு மின்னணு உணரிகள் மூலம் இயக்கப்படுகின்றன. நாம் உள்ளே நுழைந்தவுடன் உறைந்து கிடக்கும் கால இடவெளிகள் உறக்கம் கலைத்து திடுமென எழுந்து நம்முன் நின்றன. தனியார் அருங்காட்சியகமாக இருந்தாலும் இதன் கட்டுமானத்தில் அரசு துறைகளின் உதவியும் உள்ளது.


வடகிழக்கு பழங்குடி வாழ்வின் அன்றாட துணுக்குகளை முழுமையாக சித்தரித்திருக்கின்றனர். கிறிஸ்தவத்திற்கு முந்திய அந்த மக்களின் வழிபாட்டு முறைகளைப்பற்றிய சித்தரிப்பையும் இடம் பெறச் செய்திருக்கலாம். அருங்காட்சியகத்தின் மொட்டை மாடியில் ஸ்கை வாக் என்ற பெயரில் உலோக தடுப்புகளுடன் கூடிய படிகளை நகர காட்சிக்காக அமைத்திருக்கின்றனர். மாலை வெளிச்சத்தில் கால் பங்கே மீதமிருந்த நிலையில் தலையில் வெள்ளி முளைத்த மரங்களின் தொகுதி போல ஷில்லாங் நின்றிருந்தது.


ஷில்லாங்கில் நல்ல தரமான மரக்கறி உணவும் ஹலால் இறைச்சி உணவும் கிடைக்கின்றது. சந்தைகளில் கூட்டம் அலை மோதுகின்றது. மக்களின் வாங்கும் ஆற்றல் வலுவாக உள்ளது.

- மேலும்


(என் வானம் , என் சிறகு புத்தகம் வாங்க)

Recent Posts

See All
bottom of page